my son name is rohit,i need to upload my son photos in siruvarmalar
Posts: 820
Threads: 393
Joined: Jul 2010
இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. உலகமே வியக்கும்வண்ணம் இருசக்கர வாகனங்கள், கார், ஜீப் போன்ற வாகனங்கள் என்றாலும் சரி, லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் என்றாலும் சரி, கடந்த சில ஆண்டுகளாக இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு வந்தால் நிறைய வாகனங்கள் விற்பனையாகும் என்ற நிலையில் சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி, அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உலகிலேயே இந்தியாவில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை மிக மோசமான, கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கிறது.
இந்தநிலையில், விபத்துகளின் எண்ணிக்கையை 2020–ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக குறைக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு, இதற்கு என்ன செய்யலாம்?, இப்போதுள்ள மோட்டார் வாகன சட்டங்களில் என்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம்? என்று ஆராய்ந்து அறிக்கைதர 18 மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்களைக்கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக்குழு மோட்டார் வாகன சட்டத்திலுள்ள 223 பிரிவுகளில், 68 பிரிவுகளுக்கு மாற்றம் கொண்டுவரும் வகையில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்தது. இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது என்னவென்றால், சாலைபோக்குவரத்து விதிகள் மீறலுக்கு இப்போதுள்ள அபராதத்தொகை போதாது, அதிகமாக உயர்த்தவேண்டும் என்பதுதான். அந்தவகையில், பல திருத்தங்களோடு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் விரைவில் நிறைவேற இருக்கிறது. இவையெல்லாம் வரவேற்கக்கூடியது, உடனடியாக நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டியதாகும். பெரும்பாலும் விபத்துகள் டிரைவர்களின் கவனக்குறைவாலும், திறமையின்மையாலும் சாலைபோக்குவரத்து விதிகள் சரியாக தெரியாததாலும், பின்பற்றாததாலும்தான் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டும்போது விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும். தற்சமயம் பஸ், லாரி, டாக்சி போன்ற வணிக ரீதியிலான வாகனங்கள் ஓட்டும் டிரைவர்களுக்கு அதற்கான லைசென்சுகளை விண்ணப்பிக்கும்போது, குறைந்தபட்ச கல்வித்தகுதி 8–வது வகுப்பு பாஸ் ஆகியிருக்கவேண்டும் என்றிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், கார் போன்ற தனியார் வாகனங்களை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாக ஓட்டிய அனுபவம் இருக்கவேண்டும் என்றிருக்கிறது. ஆனால், இப்போது இந்த கல்வித்தகுதியை முற்றிலுமாக நீக்கியதோடு மட்டுமல்லாமல், முறையான சிறப்பு பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றிருந்தால், அதாவது அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றிருந்தால் இந்த ஒரு ஆண்டு அனுபவம் தேவையில்லை என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி நிலையங்களில் படிப்பவர்களுக்கு நிச்சயமாக டிரைவிங் மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகள், வாகன பராமரிப்பு, ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், திறமை கற்றுக்கொடுப்பதால் இத்தகைய முடிவு நிச்சயம் தேவைதான்.
வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப டிரைவர்கள் இல்லை. கடந்த ஆண்டே நாட்டில் 22 சதவீதம் டிரைவர்கள் பற்றாக்குறை இருந்தது என்று மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியிருக்கிறார். மோட்டார் வாகனங்களை ஓட்ட படிப்பு தேவையில்லை. திறமையும், சமயோசித புத்தியும், எதையும் உடனடியாக தீர்மானித்து முடிவு எடுக்கும் ஆற்றலும், போக்குவரத்து சிக்னல்களைப் பார்த்து அதை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வும் இருந்தால்போதும். ஒருபக்கம் டிரைவர்கள் பற்றாக்குறை, மறுபக்கம் வறுமையின் காரணமாக படிப்பறிவு 8–வது வகுப்புகூட இல்லாமல் வேலைவாய்ப்புத்தேடி அலையும் இளைஞர்கள், மோட்டார் வாகன டிரைவர்கள் ஆக இந்த முடிவு நிச்சயம் வரப்பிரசாதம்தான். ஆனால், டிரைவிங் லைசென்சு கொடுக்கும்போது, போக்குவரத்துத்துறை அவர்களுக்கு நன்றாக வாகனங்கள் ஓட்டத்தெரிகிறதா?, போக்குவரத்து விதிகள் தெரிகிறதா? என்பதையெல்லாம் தீவிரமாக சோதனை மேற்கொண்டு, அதன்பின்னர் வழங்கும் வகையில் அலுவல் நடைமுறைகளை மட்டும் கடுமையாக்க வேண்டும்.